கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா
ஒன்பதாம் திருமுறை
1. கோயில்
பண் - பஞ்சமம்
195
மின்னார் உருவம் மேல்விளங்க
    வெண்கொடி மாளி கைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்றுவந்து
    நின்றது போலும் என்னாத்
தென்னா என்று வண்டுபாடும்
    தென்தில்லை அம்ப லத்துள்
என்னார் அமுதை எங்கள்
    கோவை என்றுகொல் எய்துவதே?
1
196
ஓவா முத்தீ அஞ்சுவேள்வி
    ஆறங்க நான்ம றையோர்
ஆவே படுப்பார் அந்தணாளர்
    ஆகுதி வேட்டுயர் வார்
மூவா யிரவர் தங்களோடு
    முன் அரங்(கு) ஏறிநின்ற
கோவே உன்றன் கூத்துக்காணக்
    கூடுவ தென்று கொலோ.
2
197
முத்தீ யாளர் நான்மறையர்
    மூவா யிர வர்நின்னோ(டு)
ஒத்தே வாழும் தன்மையாளர்
    ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டுபாடும்
    தென்தில்லை அம்ப லத்துள்
அத்தா உன்றன் ஆடல்காண
    அணைவதும் என்று கொலோ?
3
198
மானைப் புரையும் மடமென்
    நோக்கி மாமலை யாளோடும்
ஆனைஞ் சாடும் சென்னிமேலோர்
    அம்புலி சூடும் அரன்
தேனைப் பாலைத் தில்லைமல்கு
    செம்பொனின் அம்ப லத்துக்
கோனை ஞானக் கொழுந்துதன்னைக்
    கூடுவது என்று கொலோ?
4
199
களிவான் உலகில் கங்கைநங்கை
    காதலனே! அரு ளென்(று)
ஒளிமால் முன்னே வரங்கிடக்க
    உன்னடி யார்க்(கு) அருளும்
தெளிவார் அமுதே! தில்லைமல்கு
    செம்பொனின் அம்ப லத்துள்
ஒளிவான் சுடரே! உன்னைநாயேன்
    உறுவதும் என்று கொலோ?
5
200
பாரோர் முழுதும் வந்திறைஞ்சப்
    பதஞ்சலிக்(கு) ஆட்டு கந்தான்
வாரார் முலையாள் மங்கைபங்கன்
    மாமறை யோர் வணங்கச்
சீரான் மல்கு தில்லைச்செம்பொன்
    அம்பலத்(து) ஆடு கின்ற
காரார் மிடற்றெங் கண்டனாரைக்
    காண்பதும் என்று கொலோ?
6
201
இலையார் கதிர்வேல் இலங்கைவேந்தன்
    இருபது தோளும் இற
மலைதான் எடுத்த மற்றவற்கு
    வாளொடு நாள் கொடுத்தான்
சிலையால் புரமூன்(று) எய்தவில்வி
    செம்பொனின் அம்ப லத்துக்
கலையார் மறிபொன் கையினானைக்
    காண்பதும் என்று கொலோ?
7
202
வெங்கோல் வேந்தன் தென்னன்நாடும்
    ஈழமும் கொண்ட திறல்
செங்கோற் சோழன் கோழிவேந்தன்
    செம்பியன் பொன்ன ணிந்த
அங்கோல் வளையார் பாடியாடும்
    அணிதில்லை அம்ப லத்துள்
எங்கோன் ஈசன் எம்மிறையை
    என்று கொல் எய்துவதே.
8
203
நெடுயா னோடு நான்முகனும்
    வான வரும் நெருங்கி
முடியான் முடிகள் மோதிஉக்க
    முழுமணி யின் திரளை
அடியார் அலகி னால்திரட்டும்
    அணிதில்லை அம்ப லத்துக்
கடியார் கொன்றை மாலையானைக்
    காண்பதும் என்று கொலோ?
9
204
சீரான்மல்கு தில்லைச் செம்பொன்
    அம்பலத் தாழி தன்னைக்
காரார் சோலைக் கோழிவேந்தன்
    தஞ்சையர் கோன் கலந்த
ஆரா இன்சொற் கண்டராதித்தன்
    அருந்தமிழ் மாலை வல்லார்
பேரா வுலகிற் பெருமையோடும்
    பேரின்பம் எய்து வரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com